பார்க்கிங் இன்றி கட்டப்படும் வணிக வளாகங்களால் நெருக்கடி: சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால் பாதிப்பு
சாத்துார்; விருதுநகர் மாவட்டத்தில் வணிக வளாகங்கள் பார்க்கிங் வசதி இன்றி கட்டப்படுவதால் இங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை ரோட்டில் நிறுத்தும்போது நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சிவகாசி மாநகராட்சி, சாத்துார், விருதுநகர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, உள்ளிட்ட நகராட்சி பகுதிகளிலும் நகரை ஒட்டியுள்ள ஊராட்சி பகுதிகளிலும் நாளுக்கு நாள் புதிதாக வணிக வளாங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் என புதிய கட்டடங்கள் கட்டப்படுகின்றன.
நகரின் முக்கிய வீதிகளில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள் கட்டும்போதே பார்க்கிங்குக்காக தனியாக இடம் ஒதுக்கிட வேண்டும். ஆனால் பார்க்கிங்குக்கு இடம் ஒதுக்காமல் கட்டடம் கட்டி திறக்கப் படுவதால் இந்த வணிக வளாகங்களுக்கு வரும் வாகன ஓட்டிகள் ரோட்டில் வாகனங்களில் நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்லும் நிலை உள்ளது.
இதன் காரணமாக நகராட்சி பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வாகனங்களால் நிரம்பி வழிகின்றன. போக்குவரத்து போலீசார் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி வாகனங்களை நிறுத்துவதற்காக சாலை ஓரத்தில் கயிறு அடித்து இடம் ஒதுக்கி உள்ளனர்.
ஆனால் இந்த இடம்டூவீலர்கள் நிறுத்துவதற்கு மட்டுமே போதுமானதாக உள்ளது.நான்கு சக்கர வாகனங்களில் வரும் வாடிக்கையாளர்கள் வேறு வழியின்றி ரோட்டில் கார்கள் , வேன்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். பெரும்பாலும் மாலை நேரங்களில் இதுபோன்று வாகனங்கள் ரோடுகளில் அணிவகுத்து நிற்பதால் பள்ளிகளுக்கு சென்று விட்டு திரும்பும் மாணவ மாணவியர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
மாலை, இரவு நேரத்தில் ரோட்டில் நிறுத்தியுள்ள வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் முதியவர்கள் ரோட்டில் நடந்து செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
புதியதாக வணிக வளாகங்கள் கட்டும்போதே பார்க்கிங் செய்வதற்கு தேவையான இடத்தை ஒதுக்கி உள்ளனரா என நகராட்சி மற்றும் மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கண்காணித்து உரிய இடத்தை ஒதுக்க அறிவுறுத்தி இருந்தால் இது போன்ற நெரிசல் ஏற்படாது. பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அதிகாரிகள் பார்க்கிங் வசதி உள்ளனவா என்பதை அறிந்த பின்னரே புதிய கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.