பயணிகள் பற்றி கவலையின்றி பஸ் ஊழியர்கள் வாக்குவாதம்

கோவை: தனியார், அரசு பஸ்களிடையே 'டைமிங்' பிரச்னை என்பது தொடர் கதையாக உள்ளது. ரோட்டில் பஸ்களை நிறுத்தி வாக்குவாதம் செய்பவர்கள், அடிதடியிலும் இறங்குவது வழக்கமாகியுள்ளது.

அசுர வேகத்தில் செல்லும் பஸ்கள் சில சமயங்களில் விபத்துக்குள்ளாவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் நடக்கிறது. ஆக.22ல் சிவானந்தா காலனி செல்லும் 5 வழித்தட எண் கொண்ட அரசு டவுன் பஸ், தனியார் பஸ்கள் போட்டி போட்டு சென்றன.

ராமநாதபுரம் சந்திப்பு அருகே தனியார் பஸ்சை முந்த முயன்ற அரசு பஸ், வளைவில் இருந்த பெட்ரோல் பங்க்கினுள் நுழைந்து பெண் ஒருவர் மீது மோதியது. அவர் காயத்துடன் தப்பினார்.

இந்நிலையில், அதே வழித்தடத்தில் செல்லும் அரசு டவுன் பஸ், தனியார் பஸ்கள் இடையே நேற்று 'டைமிங்' பிரச்னை ஏற்பட்டது. திருச்சி ரோடு, ரெயின்போ ஸ்டாப்பில் அரசு பஸ்சை மறித்து நின்ற தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் இருவரும், அரசு பஸ் பணியாளர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

காலை 9:30 முதல் கால் மணி நேரத்துக்கும் மேலாக பாதி ரோட்டை மறித்து நின்ற பஸ்களால், பின்னால் வந்த வாகனங்களும் வரிசை கட்டி நின்றன.

பயணிகள் பற்றி கவலைப்படாமல், இப்படி விதிமீறும் பஸ்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பயணிகள்.

Advertisement