பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு மிகுந்த வரவேற்பு; புக்மைஷோவில் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்!

- நமது நிருபர் -




புக்மைஷோவில் பிரதமர் மோடியின் வதோதரா நிகழ்ச்சி டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன; மேலும் 42 ஆயிரம் பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெறும் பிரதமர் மோடியின் பொது நிகழ்ச்சிக்கு, தனியார் டிக்கெட் தளமான புக்மைஷோ மூலம் ஆன்லைனில் துவங்கப்பட்ட இலவச முன்பதிவுத் சீட்டுகள் அனைத்தும் ஒரே மணி நேரத்திற்குள் விற்றுத் தீர்ந்தன. டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்த பிறகும், 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் டிக்கெட் கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

வதோதரா மாநகராட்சி மூலம் இந்த முன்பதிவு நிர்வகிக்கப்பட்டது. கூட்ட நெரிசலைக் குறைக்கவும், பாதுகாப்பான நுழைவை உறுதி செய்யவும், புக்மைஷோ மூலம் பாதுகாப்பான கியூஆர் குறியீடு கொண்ட டிக்கெட் டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்டுள்ளது.

வதோதராவில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழக மைதானத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில் மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் 2047க்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கு குறித்து பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இந்த பயணத்தின் போது குஜராத் மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.35,000 கோடிக்கும் அதிகமான ரயில்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் மோடி துவங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் மோடியின் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு இதுபோன்று புக்மைஷோ மூலம் டிஜிட்டல் முறையில் முன்பதிவு மற்றும் இருக்கை ஒதுக்கீடு முறை கையாளப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement