மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு துாக்கு தண்டனை விதித்தது நெல்லை கோர்ட்

8


திருநெல்வேலி: திருநெல்வேலியில் 16 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சின்னகுட்டி என்பவருக்கு தூக்கு தண்டனை, முனீஸ்வரனுக்கு 13 ஆண்டு சிறை, முருகேசனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி பிளஸ் 2 படித்து வந்தார். சிறுமியை ஆசைவார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று, சின்னகுட்டி, முனீஸ்வரன், முருகேசன் ஆகியோர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து, சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வழக்கு திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பு சார்பில் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சின்னகுட்டிக்கு தூக்குத் தண்டனை, முனீஸ்வரனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை, முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இன்று (செப் 08) தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் ஒருவருக்கு தூக்குத் தண்டனையும், மற்ற இருவருக்கு நீண்டகால சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.

Advertisement