முதுமலை சாலையோரம் 30 மீட்டருக்கு செடிகள் அகற்றம்

கூடலுார்: முதுமலையில், வனவிலங்குகள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மைசூரு சாலையோரம், 30 மீட்டர் துாரம் முட்புதரை அகற்றும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

கூடலுார் மைசூரு தேசிய நெடுஞ்சாலை, தமிழகம், கேரளம், கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். இச்சாலையில், தொரப்பள்ளி முதல் தமிழகம்– கர்நாடக எல்லையான கக்கனல்லா வரையிலான, 16 கி.மீ., துாரம் முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் செல்கிறது. இச்சாலையோரம் யானை, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றன. இவைகள், உணவு, குடிநீருக்காக அடிக்கடி சாலையை கடந்து செல்கின்றன.

இதனால், ‘இவ்வழியாக பயணிக்கும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகள் அருகே, வாகனங்களை நிறுத்தி இடையில் ஏற்படுத்த கூடாது,’ என, தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், பருவமழை தொடர்ந்து சாலையோரங்களில் செடிகள் வளர்த்து முட்புதர்களாக காணப்படுகிறது.

இச்சாலையோரம் வனவிலங்குகள் மேய்ச்சலில் ஈடுபடுவது, சுற்றுலா பயணிகளுக்கு தெரிவதில்லை. இவைகள், திடீரென சாலையை கடந்து செல்லும் போது, வாகனங்களில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனை தடுக்கும் வகையில், முதுமலை தொரப்பள்ளி வன சோதனை சாவடி முதல், தமிழக - கர்நாடக எல்லையான கக்கனல்லா, 16 கி.மீ., துாரம் சாலையில் இருபுறமும், 30 மீட்டர் துாரம் செடிகளை அகற்றும் பணியை வனத்துறையினர் துவங்கியுள்ளனர்.

வனத்துறையினர் கூறுகையில், ‘முதுமலை சாலையோரம் வளர்ந்துள்ள செடிகள், முட்புதர்களை அகற்றுவதால், வனவிலங்குகள் மேய்ச்சலில் ஈடுபடுவதை, சுற்றுலா பயணிகள் துாரத்தில் இருந்தே பார்க்க முடியும். மேலும், வன விலங்குகள், சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் ஆபத்துகளை தடுக்க முடியும்,’ என்றனர்.

Advertisement