திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை'
திருச்சி : குடிநீர் பிரச்னையால், 100க்கும் மேற்பட்ட பெண்கள், காலி குடங்களுடன் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட, 57வது வார்டில் உள்ள எ.புதுார், அரசு காலனி, எம்.ஜி.ஆர்., நகர், கொல்லங்குளம், பாரதி நகர், கேணித்தெரு ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும் தண்ணீர் வரும் நாட்களில் கலங்கலாக இருந்துள்ளது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், நேற்று காலை, 100க்கும் மேற்பட்ட பெண்கள், கையில் காலி குடங்களுடன், தி.மு.க., கவுன்சிலர் முத்துச்செல்வம் தலைமையில், மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மாநகராட்சி கமிஷனர் பிரதாப் சிங்கிடம், கவுன்சிலர் முத்துச்செல்வம் முறையாக தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின், மேயர் அன்பழகன் 'பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, உடனடியாகக் குடிக்கத் தகுந்த சுத்தமான குடிநீரை தங்கு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார். இதையடுத்து ஒரு மணி நேரம் போராட்டம் நடத்திய மக்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.