தமிழக ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் விதிமீறல்; நிதியை வேறு பணிகளுக்கு திருப்பி விட்டது அம்பலம்!

12


சென்னை: தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, சேலம் ஆகிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் கடுமையான விதிமீறல்கள் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மத்திய அரசின் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் தொடர்பான மத்திய தணிக்கைக் குழு அறிக்கை வெளியாகி உள்ளது. நிதி வேறு தேவைகளுக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளது; அங்கீகரிக்கப்படாத திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. அனுமதிக்கப்பட்ட திட்டப் பணிகளை விடுத்து, மாநகராட்சி மின்சாரக் கட்டணம் செலுத்தவும், ஊழியர்களின் சம்பளம் வழங்கவும், சொகுசு கார்கள், கணினிகள் மற்றும் 110இன்ச் எல்இடி டிவிகள் வாங்கவும் ஸ்மார்ட் சிட்டி நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை, சேலம் போன்ற நகரங்களில் ரூ.100 கோடிக்கும் மேல் செலவழித்து கட்டப்பட்ட வணிக வளாகங்கள் மற்றும் பல அடுக்கு வாகன நிறுத்தங்கள் லிப்ட் வசதிகள் இன்றி இன்னும் முழு பயன்பாட்டுக்கு வரவில்லை; 7 நகரங்களில் 2015-23ம் ஆண்டு காலகட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட ரூ.1,602.2 கோடி மதிப்பிலான 52 திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும் இத்திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. அதேவேளையில், ரூ.623.86 கோடி மதிப்பிலான 44 திட்டமிடப்படாத பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருநெல்வேலியில் அதிகபட்சமாகத் திட்டமிடப்படாத பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; அங்கு ரூ.314.62 கோடி மதிப்பிலான 15 திட்டங்கள் இவ்வாறு நடந்துள்ளன; திட்டமிடப்படாத பணிகளில் சென்னை மாநகராட்சி வளாகத்தில் பசுமை கட்டடம், கோவை நேரு விளையாட்டு அரங்கில் விளக்குகள் அமைத்தல், திருநெல்வேலியில் விருந்தினர் மாளிகை மற்றும் மதுரையில் கருத்தரங்கு மையம் ஆகியவை அடங்கும். கார்கள், கணினிகள், சட்டக் கட்டணங்கள் மற்றும் பிற செயல்பாடுகள் உள்ளிட்ட அனுமதிக்கப்படாத செலவுகளுக்காக ஆறு நகரங்கள் ரூ.23.83 கோடி நிதியை பயன்படுத்தியது தெரியவந்தது.

சென்னையில், அரசு விளம்பரங்களுக்கு ரூ.66.58 லட்சமும், ஸ்மார்ட் சிட்டி அல்லாத திட்டங்களுக்கு ரூ.18.44 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்பின் கருத்தரங்கு அறையைப் புதுப்பிக்கவும், 110 அங்குல டிவி, கணினிகள், பிரிண்டர்கள் மற்றும் தளவாடங்களை வாங்கவும் நிதியைச் செலவிட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி, கழிவுநீர் அகற்றும் பணியாளர்களின் ஊதியத்தை வழங்க நிர்வாக மற்றும் அலுவலகச் செலவு நிதியிலிருந்து ரூ.2.59 கோடியைப் பயன்படுத்தியது. மதுரை மாநகராட்சி, பிற குடிமைப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர்களுக்குக் கட்டணம் செலுத்த ரூ.48.36 லட்சத்தைப் பயன்படுத்தியது.

ஸ்மார்ட் சிட்டி திட்டங்களைச் செயல்படுத்த உருவாக்கப்படும் சிறப்பு நிறுவனங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.200 கோடி மூலதனம் இருக்க வேண்டும். ஆனால், கம்பெனிகள் சட்டத்தின் கடுமையான விதிகளைத் தவிர்ப்பதற்காக, இவை வெறும் ரூ.10 லட்சம் மூலதனத்துடன் துவங்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறியும், நிதியை விவேகத்துடன் கையாளும் திட்டத்தின் நோக்கத்தைச் சிதைக்கும் வகையிலும், சிறப்பு நிறுவனங்களுக்குப் பதிலாக மாநகராட்சிகளே டெண்டர்களை கோரின என்பதும் தெரியவந்துள்ளது.

Advertisement