இந்தியாவுக்கு திரும்புவதை திட்டமிட்டே தவிர்க்கவில்லை; சொல்கிறார் விஜய் மல்லையா

11


லண்டன்: இந்தியாவுக்கு மீண்டும் திரும்புவதை தான் திட்டமிட்டே தவிர்க்கவில்லை என்று பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் 9000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் மோசடி செய்ததாக வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, 2016ல் அவர் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பி சென்றார். கடந்த 2019 ல் தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார். அவரை நாடு கடத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தான் வேண்டுமென்றே இந்தியாவுக்குத் திரும்புவதைத் தவிர்க்கவில்லை என்றும், தான் பிரிட்டனை விட்டு வெளியேற சட்டப்பூர்வமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில்; என்னுடைய வழக்கு தொடர்பாக மும்பை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், கடந்த 2021ம் ஆண்டிலேயே என்னுடைய ரூ.14,131.60 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், என்னை வங்கி மோசடியாளர் என்றே சொல்கிறார்கள்.
எல்லாரும் என்னை நாட்டை விட்டு ஓடிப்போனவர் என்றும், இந்தியாவுக்கு வர மறுப்பதாகவும் கூறுகின்றனர். நான் 1992ம் ஆண்டு முதல் பிரிட்டனில் நிரந்தரமாக வசித்து வருகிறேன். நான் வேண்டுமென்றே இந்தியாவுக்குத் திரும்புவதைத் தவிர்க்கவில்லை. எனக்கு பிரிட்டனை விட்டு வெளியேற சட்டப்பூர்வமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. என்னுடைய விவகாரத்தில் இந்திய அரசு பெரும் அநீதியை இழைத்துள்ளது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement