வந்தே மாதரம் முழு பாடலுக்கு காங்கிரஸ் மீண்டும் எதிர்ப்பு; இண்டி கூட்டணியில் புகைச்சல்

16

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் சர்வதேச திரைப்பட விழாவில் 'வந்தே மாதரம்' முழுமையாக பாடப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்புத் தெரிவித்தது. இதனை தேசிய மாநாட்டு கட்சி கண்டித்ததால், கூட்டணிக்குள் மோதல் வெடித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் மாநிலத்தில் சர்வதேச திரைப்பட விழாவில், வந்தே மாதரம் பாடலில் முழு பாடல் இசைக்கப்பட்டது. அப்போது, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.

இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தன்னுடைய எக்ஸ் தளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, "வரிகள் நீக்கப்பட்ட வந்தே மாதரம் பாடலை இசைக்கும் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு ஆதரவு கொடுத்து, அதன்படி உறுதியாக இருக்க வேண்டும்," என்று தங்களின் கூட்டணி கட்சியான தேசிய மாநாட்டு கட்சிக்கு கோரிக்கை விடுத்தார்.

ஆனால் காங்கிரஸின் இந்தச் செயலுக்கு தேசிய மாநாட்டு கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் பஷிர் அகமது,"வந்தே மாதரம் பாடலை எப்போது பாட வேண்டும், எவ்வளவு பாட வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் எங்களுக்கு உத்தரவு போட வேண்டாம். யாரும் இதை திணிக்க முடியாது. எல்லாம் மக்களின் விருப்பம். மக்கள் மீது திணிக்கப்படுவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்," என்று தடாலடியாக கூறி விட்டார்.

இதன்மூலம், வந்தே மாதரம் பாடல் விவகாரத்தில் இண்டி கூட்டணி கட்சிக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது, வந்தே மாதரம் முழு பாடல் இசைக்கப்பட்டதற்கு, அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரது இந்த செயலுக்கு பாஜ உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement