நொய்யல் கரையில் விதி மீறி ரோடு வருவாய் துறையினர் தடை

சோமனூர்: சோமனூரில் நொய்யல் கரையில் விதிமீறி ரோடு அமைக்கும் பணிக்கு வருவாய்த்துறையினர் தடை விதித்தனர்.

சோமனூரின் தெற்கு பகுதியில் நொய்யல் ஆறு உள்ளது. ஆற்றில் உள்ள ஆகாய தாமரைகளை அகற்றி, கரைகளில் மரக்கன்றுகள் நடவு செய்ய, தனியார் அறக்கட்டளைக்கு நீர்வள ஆதாரத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

பணிகளை செய்யும் அறக்கட்டளையினர், விதிகளை மீறி, ஆற்றங்கரையில் புதிதாக ரோடு அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கு, அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சூலூர் தாசில்தார் செந்தில்குமார் நேற்று அங்கு ஆய்வு செய்தார்.

அப்போது விவசாயிகள் தாசில்தாரிடம், ‘தனிநபர்கள் சிலருக்காக விதிகளை மீறி ரோடு அமைக்கப்படுகிறது. இதனால், ஒரு கி.மீ., நீளத்துக்கு ஆறு குறுகிவிட்டது. ஆற்றில் இருந்து மண் எடுத்து ரோடு போடப்பட்டுள்ளது. மழைக் காலத்தில் ஆற்றில் வெள்ளம் வந்தால், விளை நிலங்களுக்குள் புகுந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது‌. போக்குவரத்து அதிகமானால், குப்பை கொட்டும் இடமாக மாறி, ஆறு மாசுபடும். எனவே, ரோடு அமைக்க தடை விதிக்க வேண்டும்’, என்றனர்.

இதையடுத்து, எந்த பணிகளையும் செய்யக்கூடாது என, சாலை அமைக்கும் பணிக்கு தடைவிதித்து தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement