அனுமதி பெற்ற பிறகே பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அறிவுறுத்தல்

 புதுச்சேரி: பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து விழா நடத்துவதற்கு அனுமதி பெற வேண்டும் என, உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சிலைகள் செய்பவர்கள் நகராட்சியிடம் முன் அனுமதி பெற்று மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி சுற்று சூழலுக்கு ஏற்ற இயற்கையான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்தி சிலைகளை உற்பத்தி செய்ய வேண்டும்.

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து விழா நடத்துவதற்கு நகராட்சி மற்றும் காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் சிலையினை அமைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட வேண்டும்.

விழா நடத்தும் இடங்களில் ஒலிபெருக்கிகள் அமைப்பதற்கு காவல்துறையிடம் உரிய முன் அனுமதி பெற வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மட்டும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் அல்லாத ஒலிபெருக்கியை அளவை குறைத்து பயன்படுத்த வேண்டும்.

வணிகர்கள், பொதுமக்கள், விழாகுழுவினர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான அலங்கார பொருட்கள் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement