ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட்; இந்திய அணி 149 ரன் குவிப்பு

துபாய்: வங்கதேசத்திற்கு எதிரான ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன் குவித்துள்ளது.

துபாயில் நடந்து வரும் ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா, இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்த நிலையில், துபாயில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணிக்கு வழக்கம் போல, ஷவாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா துவக்க வீராங்கனைகளாக களமிறங்கினர்.

அணியின் ஸ்கோர் 9ஐ எட்டிய போது, ஸ்மிரிதி மந்தனா வெறும் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதன்பிறகு, பிரதிகா ராவல் 20 ரன்னில் அவுட்டானார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஷபாலி வர்மா இந்தப்போட்டியிலும் அரைசதம் அடித்தார். 40 பந்தில் 64 ரன் குவித்து அவுட்டானார். தொடர்ந்து, ரிச்சா கோஷ் (24), தீப்தி ஷர்மா (13) ஆகியோர் ஓரளவுக்கு பங்களிப்பை கொடுத்தனர்.

இறுதியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன் குவித்துள்ளது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 24 ரன் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வங்கதேச அணி தரப்பில் சுல்தானா 2 விக்கெட்டும், மருபா அக்தர், நஹிதா அக்தர், ரெபாயா கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.



Advertisement