ஆக்கிரமிப்பு அகற்றாதே! களத்தில் 'குதித்த' துணை மேயர்; குழப்பத்தில் அதிகாரிகள்

திருப்பூர் : திருப்பூர், ராயபுரத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற மாநகராட்சி பணியாளர்களை, துணை மேயர் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு தொடர்பான மக்கள் புகார்களுக்கு மாநகராட்சி தரப்பில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், திருப்பூர் ராயபுரத்தில் உள்ள ரோடு ஆக்கிரமிப்புகள் குறித்து மாநகராட்சி மேயர், கமிஷனரிடம் புகார் அளித்தனர்.

இச்சூழலில், மாநகராட்சி உத்தரவின் பேரில், நகர அமைப்பு பிரிவினர் ராயபுரம் பூங்கா அருகே அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வாகனத்துடன் சென்றனர். உடனே, இதற்கு அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த, அந்த வார்டு கவுன்சிலரும், துணை மேயருமான பாலசுப்ரமணியம் விரைந்து வந்தார். தொடர்ந்து, ஆக்கிரமிப்பு எடுப்பதை தடுத்து நிறுத்தினார்.

ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக பேசிய துணை மேயர், 'ஆக்கிரமிப்பு கடைகளை சற்று தள்ளி போட்டுக் கொள்ளுங்க...' என அறிவுறுத்தி, 'ஆக்கிரமிப்பு அகற்ற கூடாது, மீறி அகற்றினால், சாலையோர வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்,' என்பதையும் தெரிவித்தார்.

துணை மேயர் தலையீட்டால், ஆக்கிரமிப்பை அகற்றாமல் மாநகராட்சி பணியாளர்கள், கிளம்பி சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

----

ராயபுரம் பார்க் பகுதியில், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளை, தடுத்து நிறுத்திய துணை மேயர் பாலசுப்ரமணியம்.

'அது வந்துங்க...'

இப்பிரச்னை குறித்து, துணை மேயர் பாலசுப்ரமணியத்திடம் கேட்டதற்கு, ''ரோட்டோரம் போடப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு, சம்பந்தப்பட்டவர்களுக்கு இடையூறு இல்லாமல் கொஞ்சம் தள்ளி போட்டனர். அவர்கள் நீண்ட காலமாக அங்கு வாழ்கின்றனர். வாழ்வாதாரம் பாதிக்க கூடாது நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் தான் போராட்டம் அறிவித்தனர்,'' என்று மழுப்பலாக பதில் கூறினார்.

Advertisement