நிலுவை தொகை செலுத்த வீட்டுவசதி வாரியம் அழைப்பு

திருவள்ளூர்: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடுகள் பெற்றோர், தங்கள் நிலுவை தொகையினை உடனடியாக செலுத்த வேண்டும்.

இதுகுறித்து திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஜெ.ஜெ.நகர் கோட்டத்திற்கு உட்பட்ட திருமுல்லைவாயல், அம்பத்துார் பகுதி 1, 2, மற்றும் ஆவடி ஆகிய திட்டப்பகுதிகளில் மனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு வழங்கப்பட்டன.

இங்கு ஒதுக்கீடு பெற்றோர், வாரிய விதிகளின்படி தொகை திருப்பி செலுத்தும் காலம் முடிவுற்றும், தமிழக அரசு வட்டி தள்ளுபடி சலுகை பலமுறை அறிவித்தும் நீண்ட காலமாக பலர் நிலுவை தொகையை செலுத்தவில்லை.

எனவே, வீட்டு மனை ஒதுக்கீடுதாரர்கள் இவ்வறிவிப்பை கண்டவுடன் தங்களிடம் உள்ள ஒதுக்கீடு ஆணை, தொகை செலுத்திய ரசீது மற்றும் ஒதுக்கீடு தொடர்பான அசல் ஆவணங்களுடன் ஜெ.ஜெ.நகர் கோட்ட அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு நிலுவைத் தொகையினை செலுத்த வேண்டும்.

வாரிய விதிமுறைகளின்படி கிரையப்பத்திரம் பெற்று கொண்டு, ஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்யும் நடவடிக்கையை தவிர்க்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement