கீழ்நீராறு அணையிலிருந்து கேரளாவுக்கு நீர் திறப்பு 

வால்பாறை : கோவை மாவட்டம், வால்பாறை அருகே, பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் (பி.ஏ.பி.,), மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு ஆகிய அணைகள் கட்டப்பட்டுள்ளன.

ஆண்டு தோறும் பருவமழை பெய்யும் போது, மேல்நீராறு, கீழ்நீராறு அணைகளில் தேக்கி வைக்கப்படும் மழை நீர், சோலையாறுஅணைக்கு திறந்துவிடப்படுகிறது. இந்த அணை நிரம்பியதும் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. தமிழக - கேரள அரசுகளிடையே, பி.ஏ.பி., ஒப்பந்தப்படி, சோலையாறு அணையில் இருந்து கேரளாவுக்கு ஆண்டு தோறும், 12.3 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும்.இதே போல் கீழ்நீராறு அணையிலிருந்து, அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரையான நான்கு மாதங்களுக்கு, கேரளாவுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் உள்ளது.

அதன்படி, கீழ்நீராறு அணையிலிருந்து, ஒரு மதகு வழியாக நேற்று காலை கேரளாவுக்கு வினாடிக்கு, 250 கனஅடி தண்ணீர் வீதம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியம், உதவி செயற்பொறியாளர் சின்ராஜ், உதவி பொறியாளர்கள் அசோக்குமார் (வால்பாறை), ஐயப்பன் (கேரளா) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் எதிர்ப்பு



பி.ஏ.பி., விவசாயிகள் கூறுகையில், கேரளாவில், இடைமலையாறு அணை கட்டி முடிக்கும் வரை, சோலையாறு அணையில் இருந்தும், கீழ்நீராறு அணையில் இருந்தும் கேரளாவுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என, இரு மாநிலங்களிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கேரளாவில், இடைமலையாறு அணை கட்டி முடித்து, பாசனத்துக்கு பயன்படுத்தும் நிலையிலும், சோலையாறு, கீழ்நீராறில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. கேரளாவுக்கு நீர் வழங்குவதை கைவிட வேண்டும். பி.ஏ.பி., திட்டத்தில், நிலுவையில் உள்ள ஆனைமலை, நல்லாறு அணைகள் கட்ட வேண்டும்,' என்றனர்.

Advertisement