வருகிறது வடகிழக்கு பருவ மழை வடமாவட்டங்களில் அதிகம் பெய்யும்

சென்னை : “இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை, இம்மாதம், மூன்றாவது வாரத்தில் துவங்கலாம். வடமாவட்டங்களில் இயல்பை விட அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது,” என, வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் கூறினார்.

அவர் கூறியதாவது:

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை கடந்தாண்டு, 8 சதவீதம் அதிகம் பெய்தது. நடப்பு ஆண்டில், 14 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. இதில், 17 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும்; 16 மாவட்டங்களில் இயல்பான அளவிலும்; ஆறு மாவட்டங்களில் குறைவாகவும் பெய்துள்ளது.

சென்னையில், நடப்பு ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை, 43 சதவீதம் அதிகம் பெய்துள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில், 74 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.

தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவின் ஒரு பகுதி ஆகியவற்றை சேர்த்து தான், வடகிழக்கு பருவமழை கணிக்கப்படுகிறது. இதன்படி, இம்மாதம் மூன்றாவது வாரத்தில், வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் வடமாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், தென் மாவட்டங்களில், இயல்பை விட குறைவாகவும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



4 நாட்களுக்கு

கனமழை தான்! குமரிக்கடல் மற்றும் தமிழக உள்மாவட்டங்களின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 7ம் தேதி வரை இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளது.இன்று கன மழைகோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்துார். நாளை கன மழைராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார், தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சி.

Advertisement