பிறந்த நாள் 'பார்ட்டி'யில் தகராறு வாலிபரை வெட்டிய 4 பேர் கைது

புதுச்சேரி, : பிறந்த நாள் பார்ட்டியில் நடனம் ஆடும்போது ஏற்பட்ட தகராறில், வாலிபரை கத்தியால் வெட்டிய நால்வரை போலீசார் கைது செய்தனர்.

முத்தியால்பேட்டை, கணேஷ்நகர், 4வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சந்துரு, 22; பச்சை குத்துபவர். கடந்த 29 ம் தேதி, மகாராஜா திருமண மண்டபத்தில் நடந்த நண்பரின் குழந்தை பிறந்த நாள் விழாவில் தனது நண்பர் சோலை நகர், சுனாமி குடியிருப்பு ஷியாம், 20; என்பவருடன் கலந்து கொண்டு நடனம் ஆடினார்.

அப்போது முத்தியால்பேட்டை கோகுல், 20; அஜய், 19; சோலை நகர் குணா, 20; கட்டை (எ) மதன், 19; ஆகியோரும் நடனம் ஆடினர். அதில், இரு தரப்பிற்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதனால் ஷியாமும், சந்துருவும் வெளியே வந்தனர். பின்தொடர்ந்து வந்த நால்வரும் இருவரிடம் மீண்டும் தகராறில் ஈடுப்பட்டனர். கோகுல் மறைத்து வைத்திருந்த கத்தியால், சந்துரு மண்டையில் வெட்டினார். தடுக்க வந்த ஷியாம் கையில் பாட்டில் குத்து விழுந்தது. நால்வரும் சேர்ந்து இருவரை சராமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

புகாரின்பேரில், கோரிமேடு போலீசார் நால்வரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement