உனக்கென்ன வேலை இங்கே; ஐ.நா., பொதுச்செயலர் வருகைக்கு இஸ்ரேல் தடை!

10

டெல் அவிவ்: ஐ.நா., பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ், இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு அந்நாடு தடை விதித்து உள்ளது.

ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், பிறகு லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது விமானப்படை மூலமும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ருல்லா கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்நிலையில் இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
ஐ.நா., பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் ஆளுமை இல்லாதவர். அவர், இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது.இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலை உலகின் பெரும்பாலான நாடுகள் கண்டித்துள்ளன. இதனை கண்டிக்காத யாரும், இஸ்ரேல் மண்ணில் கால் வைப்பதற்கு உரிமை இல்லை.

ஹமாஸ் கொலைகார்கள் நடத்திய பாலியல் அட்டூழியங்களை கண்டிக்காத ஐ.நா., பொதுச்செயலாளர், அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கவில்லை.
ஹமாசை சேர்ந்த பயங்கரவாதிகள், பலாத்கார குற்றவாளிகள், கொலைகாரர்களை கொண்ட ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி அமைப்பினரையும், சர்வதேச பயங்கரவாதத்தின் தாய்நாடான ஈரானுக்கும் ஆதரவளிக்கும் ஆண்டனியோ குட்டரெஸ், ஐ.நா., வரலாற்றில் ஒரு கறையாக எப்போதும் நினைவு கொள்ளப்படுவார்.
அவர் இல்லாமல், எங்களது குடிமக்கள் மற்றும் நாட்டின் பெருமையை பாதுகாக்க இஸ்ரேல் தொடர்ந்து முயற்சி செய்யும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement