சென்னையில் ஒரு கிராமீய திருவிழா
'செம்பொழில் 2024' எனும் பெயரில் மூன்று நாள் கிராம திருவிழா மற்றும் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது.
நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு நமது கிராம திருவிழா மற்றும் பாரம்பரிய அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த விழா நடைபெற்றது.
கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து சென்னை நகருக்கு பலரும் குடிபெயர்ந்து வருகின்றனர். நகர வாழ்க்கை நவீன வசதிகள் கொண்டதாக இருந்தாலும், கிராம வாழ்க்கை தந்த மகிழ்ச்சி நிம்மதி ஆரோக்கியத்தை பெரும்பாலும் இழந்தே இந்த வசதியைப் பெற்றுள்ளளோம்.
நமக்காவது பம்பரம் விட்டது,கோலி விளையாடியது,மரமேறியதும்,கரலாக்கட்டை சுழற்றியதும்,இலந்தைப்பழமிட்டாய்,கடலை உருண்டை,தேங்காய் பர்பி,கோக்கோ மிட்டாய்,குச்சி பிஸ்கட் போன்றவை சாப்பிட்டது நினைவிலாடும் ஆனால் சென்னையிலே பிறந்து ஏசியிலேயே வளரும் இந்த தலைமுறை குழந்தைகளிடம் அந்த மலரும் நினைவுகளை எப்படிச் சொல்லி விளங்கவைப்பது.
அதற்காகவே இந்தக் கண்காட்சி அமைந்திருந்தது,கிராமத்து மாடுகள் ஆடுகள் இவைகளைப் பார்த்ததுடன், மாட்டு வண்டியில் பயணம் செய்தும் சந்தோஷப்பட்டனர்.இந்த கிராம திருவிழாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் வகையில் பல வகை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
நம்முடைய பாரம்பரிய உணவுகளை சாப்பிட்டு மகிழ்ந்தனர்.உறியடி அடித்து இளவட்டக்கல் துாக்குதல் என்ற பல நிகழ்வில் 'அந்தக்கால' இளைஞர்கள் சிலர் கலந்து கொண்டு நாங்க கிராமத்து ஆளுங்க என்பதை இலகுவாக நிருபீத்தனர்.
மெய்யழகன் படத்தில் டோனி என்ற பெயருடன் நடித்த ஜல்லிக்கட்டு மாடு கண்காட்சியில் ஹைலைட்டாக காணப்பட்டது சினிமா புகழ் காரணமாக பலரும் அதனுடன் எச்சரிக்கையான துாரத்தில் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர்,பழங்கால இசைக்கருவிகளை இசைத்தும் இசைக்கவைத்தும் மகிழ்ந்தனர்.
இந்த கிராமீய திருவிழாவினை ஜனவரி மாதத்தில் பொங்கல் விடுமுறையின் போது நன்கு விளம்பரப்படுத்தி மீண்டும் ஒரு முறை நடத்தினால் மக்களும் விழா குழுவினரும் இன்னும் பெரிதும் பயன்பெறுவர்.
-எல்.முருகராஜ்.