டிரைவர் கொலையில் 3 பேர் கைது வன்முறையில் ஈடுபட்ட 12 பேர் கைது

வத்திராயிருப்பு,:விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா கூமாபட்டியில் லோடு வேன் டிரைவர் முத்துக்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இறுதி ஊர்வலத்தில் வன்முறையில் ஈடுபட்ட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்து 12 பேரை கைது செய்தனர்.

கூமாபட்டி ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் 26, லோடு வேன் டிரைவர். இவர் செப்., 30 மாலை ஊரணி தெரு தோப்பில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கூமாபட்டி போலீசார் அதே ஊரைச் சேர்ந்த கந்தகுமார் 26, மாரீஸ்வரன் 26, காரியாபட்டி ஆவியூரைச் சேர்ந்த கண்ணுச்சாமி 26, ஆகிய மூவரை கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரித்ததில் நான்கு பேரும் சம்பவ பகுதியில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தங்களை முத்துக்குமார் தரக்குறைவாக பேசியதால் கொலை செய்ததும் தெரியவந்தது.

நேற்று முன்தினம் இரவு முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் கூமாபட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து நெடுங்குளம் ரோட்டில் செல்லும் போது வன்முறை ஏற்பட்டு வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மண்டை உடைக்கப்பட்டதில் கூமாபட்டியைச் சேர்ந்த 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்தோணி 23, தர்மராஜ் 50, முத்தையா 47, செல்லப்பாண்டி 18, நாராயணன் 18, உட்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். கூமாபட்டியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement