இம்ரான் கட்சியினர் 700 பேர் கைது: பாகிஸ்தானில் வலுக்கும் போராட்டம்!

1

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்க கோரி போராட்டம் நடத்திய தெரீக்-இ-இன்சாப் கட்சியை சேர்ந்த 700 பேர் கைதாகி உள்ளனர்.

இம்ரான் கான், கடந்த ஆண்டு 2023, ஆகஸ்ட் 5 முதல் பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். அவரை விடுவிக்க வலியுறுத்தி அவரது கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டமும் அந்நாட்டில் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.

இது குறித்து இம்ரான் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூறியதாவது:

தெரீக்-இ-இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கானை, சிறையிலிருந்து விடுவிக்கக்கோரியும், விலைவாசியை கட்டுப்படுத்தக்கோரியும், போராட்டத்தில் ஈடுபட்ட 700 பேரை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.

இனிமேலும் காத்திருக்க மாட்டோம், பொறுமையாக இருக்க மாட்டோம். எங்களை கட்டுப்படுத்த முடியாது. நாட்டிற்காக போராட தயாராக உள்ளோம். வெற்றியோ அல்லது தோல்வியோ எங்கள் போராட்டத்தை வலுப்படுத்துவோம்.
இவ்வாறு இம்ரான் கான் கட்சியின் நிர்வாகிகள் கூறினர்.
தொடர் போராட்டங்களால் பாகிஸ்தானில் முக்கிய நகரங்களில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது.

Advertisement