கீழடி தளத்தை ஹெலிகாம் கேமராவில் பதிவு செய்யும் பணி

கீழடி: கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு நடந்த இடங்களை தொல்லியல் துறையினர் ஹெலிகாம் கேமராவால் பதிவு செய்து வருகின்றனர்.

கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு பணிகள் தனியார் நிலத்தில் கடந்த ஜூன் 18ம் தேதி தொடங்கியது. இதுவரை ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு அதில் இருந்து பாசிகள், கண்ணாடி மணிகள், ஆட்டக்காய், சுடுமண் குழாய், பானைகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன.

வழக்கமாக ஜனவரியில் தொடங்கி செப்டம்பரில் பணி நிறைவடையும், இந்தாண்டு தாமதமாக தொடங்கியுள்ள நிலையில் இதுவரை ஒன்பது குழிகள் வரை தோண்டப்பட்டு பணிகள் நடந்துள்ளன. இனி மழை காலம் தொடங்க இருப்பதால் இதுவரை நடந்த பணிகளை ஆவணப்படுத்த தொல்லியல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

ஹெலிகேமரா மூலம் அகழாய்வு தளத்தையும் அதில் உள்ள பொருட்களையும் பதிவு செய்து வருகின்றனர். ஒவ்வொரு கட்ட அகழாய்வின் இறுதியில் தளத்தை சுத்தம் செய்து வீடியோ மற்றும்புகைப்படங்களாக பதிவு செய்வார்கள், கீழடி அகழாய்வு குறித்த ஆவணப்படங்கள் தயாரிக்கவும் தொல்லியல் துறைக்கு ஆவணமாகவும் பயன்படுத்த படங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு குழியிலும் மண் அடுக்குகள் வரிசைப்படுத்தப்பட்டு படங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இரண்டு நாட்கள் இப்பணிகள் நடைபெறும்.

Advertisement