அறங்காவலர் நியமனத்தை கண்டித்து மக்கள் போராட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி அரியாக்குறிச்சியில் வெட்டுடையார்காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அறங்காவலர்களை அரசு நியமித்து வருகிறது.

கடந்த காலங்களில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 5 அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2009க்கு பின்னர் இக்கோயிலில் அறங்காலர்கள் நியமிக்கப்படவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன் கோயிலுக்கு 3 அறங்காவலர்களை மட்டுமே அரசு நியமித்தது. அதில் பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவரையும் நியமிக்கவில்லை. இதை கண்டித்தும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரை அறங்காவலராக நியமிக்ககோரியும் கிராம மக்கள் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூ., தலைமையில் கொல்லங்குடி, அரியாக்குறிச்சி, விட்டநேரி, கீரனுார், ராணியூர், மேப்பல் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று கொல்லங்குடி-மதுரை- தொண்டி சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஹிந்துசமய அறநிலைய துறை அறங்காவலர் குழுவில் பட்டியல் இன உறுப்பினரை உடனே நியமனம் செய்ய வலியுறுத்தினர்.

Advertisement