ஒருபுறம் குதறல் மறுபுறம் புதர்கள்:- பயமுறுத்தும் ரோடுகள் கலக்கத்தில் காந்திஜிநகர் குடியிருப்போர் 

திண்டுக்கல்: ஒருபுறம் குதறல் மறு புறம் புதர்கள் என பயமுறுத்தும் தெருக்கள் ரோடுகள், சுத்தம் செய்யப்படாத மேல்நிலை குடிநீர் தொட்டி, துார்வாரப்படாத சாக்கடைகள், எரியாத விளக்குகள் என பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர் திண்டுக்கல் காந்திஜி நகர் குடியிருப்போர்.

திண்டுக்கல் -- திருச்சி ரோடு மேம்பாலத்தையொட்டி அமைந்துள்ளது காந்திஜி நகர். குடியிருப்போர் நலசங்கம் தலைவர் புவனேஸ்வரி, செயலாளர் சித்ரா, துணைத்தலைவர் சுரேஷ், பொருளாளர் சித்ரா, செயற்குழு உறுப்பினர் தேனம்மாள் கூறியதாவது : அனைத்து வரிகளையும் கட்டுகிறோம் ஆனால் சீலப்பாடி ஊராட்சியிலிருந்து எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுப்பதில்லை. குறிப்பாக குப்பை இப்பகுதியில் அள்ளப்படுவதில்லை. எங்களின் சொந்த செலவில் நாங்களே ஆட்களை வைத்து அள்ளுகிறோம். இது மட்டுமல்ல நமக்குநாமே என்பது பெரும்பாலான வசதிகளை நாங்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதாகிறது. இங்கு கொசுமருந்து என்பது அடிப்பதே கிடையாது. சில இடங்களில் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. சாக்கடைகளை துார்வாருவதே கிடையாது. இதனால் நோய்தொற்று ஏற்படும் சூழல் நிலவுகிறது. மழைகாலம் நெருங்குவதால் கழிவுநீர் தேங்காமல் துார்வார வேண்டும்.

மேல்நிலைத்தொட்டி முன்பெல்லாம் 2 மாதத்திற்காவது ஒருமுறை வந்து சுத்தம் செய்து செல்வர். ஆனால் தற்போது சுத்தம் செய்வதே கிடையாது. பவுடரை பைப் வழியாக செலுத்துவது மட்டுமே செய்கின்றனர். குறுக்குத் தெருக்களில் போதிய தெருவிளக்குகள் கிடையாது. பொதுக்குழாய்கள் ஏதும் இப்பகுதியில் இல்லை.

எங்கள் பகுதியின் குறுக்கு தெரு, சந்து பகுதி காட்டு வழிப்பாதை போல் ஓரங்களில் புற்கள் முளைத்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. குடியிருப்பு பகுதிகளுக்குள் இவ்வாறு இருப்பதால் பூச்சிகள் சில நேரங்களில் வருவது தெரியவில்லை. குறிப்பாக போலீசார் ரோந்து பணிகளை இப்பகுதியில் மேற்கொள்ள வேண்டும். எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தாலே போதும் என்றனர்.

Advertisement