மேகமலை புலிகள் காப்பகத்திலும் யானை - மனித மோதல் அபாயம்; கவனம் செலுத்துமா தமிழக அரசு

விருதுநகர் : தமிழகத்தில் கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதகிளில் யானை - மனித மோதல் அதிகம் உள்ள நிலையில், ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக சரணாலயத்திலும் இதன் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் மலையடிவார தோட்டங்களில் சேதம் செய்வது அதிகரித்து வருவது, அதை விரட்ட வேட்டு வெடிப்பதும் தொடர்கதையாக உள்ளது.

மத்திய அரசு 2010ல் யானையை பாரம்பரிய விலங்காக அறிவித்துள்ளது. இதில் ஆசிய யானைகள் சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பின் சிவப்பு அட்டவணையில் அழியும் நிலை விலங்காக பட்டியல் படுத்தப்பட்டுள்ளது. இந்த யானைகள் தமிழகத்தில் கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்கு அடுத்தபடியாக விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியின் ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தில் அதிகளவில் காணப்படுகிறது. மலையடிவாரத்தில் தேவதானம், சாஸ்தா கோயில், வாழவந்தான் கோயில், அய்யனார் கோயில், கல்லாத்துக்காடு, ராக்காச்சி அம்மன் கோயில், செண்பகதோப்பு, அத்திக்கோயில், பந்தப்பாறை, பிள்ளையார்நத்தம், தொட்டியபட்டி, வ.புதுப்பட்டி, கான்சாபுரம், பிளவக்கல் அணை, நெடுங்குளம், தாணிப்பாறை ஆகிய பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருக்கும்.

ஒரு யானை அதன் மொத்த எடையில் 5 சதவீத எடைக்கு உண்ணும். அதாவது தினசரி 150 - 200 கிலோ உணவை எடுத்து கொள்ள வேண்டும். நுாறு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். நார்ச்சத்து, உப்புள்ள மண், ஊட்டச்சத்து மிகுந்த பலவகையான உணவுகளை தேடி தேடி சாப்பிட்டால் தான் யானை ஆரோக்கியமாக இருக்கும். அதன் வழித்தடத்தை மறைத்து ஆக்கிரமிப்பதால் யானைகள் தடுமாறுகின்றன. அவை வனப்பரப்பில் இருந்து விலகி மலையடிவார விளைநிலங்களுக்குள் வந்து செல்கின்றன.

விளைநிலங்களுக்கு வருவதால் மனிதன் - யானை மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது. சிலர் தந்தம், தோலுக்காக யானைகளை வேட்டையாடுகின்றனர். இந்தாண்டு ராஜபாளையத்தில் மே மாதம் கூட யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆகஸ்ட் மாதம் ஒரு யானை மின்வேலியில் சிக்கி இறந்தது. தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் யானைகள், மா, தென்னை, வாழை மர விளைச்சலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

யானைகள் விளைநிலங்களுக்கு வராமலும், வனப்பரப்பிலே அவற்றிற்கு தேவையானவற்றை உணவு கிடைக்க செய்யவும் வனத்துறையின் நடவடிக்கை அவசியமாகிறது. வனப்பரப்பில் இருந்து வயல்வெளிக்குள் அகழிகள், புதிய தொழில்நுட்பம் அவசியமாகிறது.

மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை துவங்கினால் யானை நடமாட்டம் குறையும். 4 நபர் கொண்ட குழுக்கள் அமைத்து 24 மணி நேரமும் வன எல்லை பகுதிகளை கண்காணிக்கப்பட்டுவருகிறது. மழை முடிந்ததும் அகழிகள் தோண்டப்படும். யானை - மனித மோதல் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றார்.

Advertisement