சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரோடு: ஈரோட்டில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளிகளில் சோதனை நடந்தது.

ஈரோடு, வள்ளிபுரத்தான்பாளையத்தில் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளி (சி.எஸ்.அகாடமி) இ-மெயில் முகவரிக்கு ஆங்கிலத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதேபோல் வீரப்பம்பாளையம் நாராயணா இ-டெக்னோ ஸ்கூல், மாணிக்கம்பாளையம் ஈரோடு பப்ளிக் ஸ்கூல், நாராயணவலசில் நந்தா பப்ளிக் பள்ளிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் தந்த தகவலின்படி, ஈரோடு தாலுகா போலீசார், நான்கு பள்ளிகளிலும் நேற்று ஆய்வில் ஈடுபட்டு, விசாரணை நடத்தினர்.

இதில் வள்ளிபுரத்தான்பாளையம் பள்ளிக்கு மட்டும் மெயில் வந்ததும், அதில் மற்ற மூன்று பள்ளிகளின் பெயர் குறிப்பிட்டிருந்ததும் தெரியவந்தது. இதனால் நான்கு பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து, குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். நான்கு பள்ளி களிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில், எதுவும் சிக்கவில்லை. பள்ளி விடுமுறைக்காக இதுபோன்ற மிரட்டல், சமீப காலமாக விடுக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் இதுவும் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement