'போதை' தகராறில் தொழிலாளி கொலை?

காரிப்பட்டி: 'போதை'யில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.


சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே அ.நா.மங்கலத்தை சேர்ந்தவர் ரவி ஷர்மா, 24; இவரது அண்ணன் நவீன்ராஜ், 27; இருவரும் நேற்று முன்தினம் இரவு, புல்லட்டில் குடிபோதையில் அதே பகுதியில் பஸ் ஸ்டாப் அருகில் சாலையோரம் நின்றனர்.அந்த வழியே போதையில் வந்த அதே பகுதியை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் ஜெகதீஸ்வரன், 27, அவரது அண்ணன் மதன்குமார், 32, அவர்களது நண்பரான தனியார் பஸ் கண்டக்டர் பெரியசாமி, 25, ஆகியோர் வழிவிடும்படி ரவி ஷர்மாவிடம் தெரிவித்தனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு தாக்கிக்கொண்டனர்.

தகராறை தடுக்க முயன்ற ரவி ஷர்மாவின் தந்தையான கூலி தொழிலாளி நேரு, 57, அடிபட்டு மயங்கினார். சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. தகராறில் காயமடைந்த மதன்குமார், பெரியசாமி, சேலம் அரசு மருத்துவமனையில் உள்ளனர். காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். 'தகராறை நேரு தடுக்க முயன்றார். அவர் மீது தாக்குதல் நடக்கவில்லை. தடுக்க முயன்றபோது தடுமாறி விழுந்துள்ளார்' என்று போலீசார் தெரிவித்தனர்.

Advertisement