ஏ.டி.எம்., கார்டை மாற்றி ஓய்வு பி.டி.ஓ.,விடம் ரூ.30,000 பறிப்பு

ராசிபுரம்: ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்து தருவதுபோல் நடித்த ஆசாமி, கார்டை மாற்றி கொடுத்து, 30 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றார்.


நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தை சேர்ந்தவர் மனோரஞ்சிதம், 68; துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பென்ஷன் பணத்தை எடுக்க, ராசிபுரம் எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,முக்கு சென்றார். அங்கிருந்த, 40 வயதுடைய அடையாளம் தெரியாத நபரிடம், கார்டு, பின் நம்பரை கொடுத்து பணத்தை எடுத்து தருமாறு கேட்டுள்ளார்.

பணம் எடுப்பதுபோல் நடித்த ஆசாமி, 'பணம் வரவில்லை' எனக்கூறி, வேறொரு கார்டை கொடுத்துவிட்டு கிளம்பினார். சிறிது நேரத்தில், 30,000 ரூபாய் எடுக்கப்பட்டதாக, மனோரஞ்சிதம் மொபைல் எண்ணுக்கு தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்தவர், வங்கிக்கு சென்று விபரத்தை கூறி, ஏ.டி.எம்., கார்டை செயலிழக்க செய்தார். ராசிபுரம் போலீசிலும் புகாரளித்தார். 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement