கொலைவெறித் தாக்குதல் வீடியோ வைரல்; விசாரித்த டில்லி போலீசுக்கு அதிர்ச்சி

புதுடில்லி: புதுடில்லியில் நடைபாதையில் தூங்கிய நபரை, ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் பார்ப்போரை பதற வைத்துள்ளன. வீடியோ வைரலான நிலையில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு; வடக்கு டில்லியில் உள்ள மாடல் டவுன் என்ற பகுதியில் சாலையோரத்தில் ஒருவர் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு பைக் ஒன்றில் 3 பேர் வந்துள்ளனர்.

இருவர் வாகனத்தில் அமர்ந்து கொள்ள மற்றொருவர் நேராக தூங்கி கொண்டு இருந்த நபரை எழுப்பி உள்ளார். யார் தம்மை எழுப்புவது என்று குழம்பி போய் அந்த நபரும் பார்க்க... அவ்வளவுதான்! அடுத்த நொடியே கையில் வைத்திருந்த கட்டையால் அந்த நபரை போட்டு சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார்.

நடப்பதை புரியாமல் அதிர்ச்சியில் அவர் இருக்க, விடாமல் அவரை மர்ம நபர் அடித்துக் கொண்டே இருக்கிறார். வலி தாங்காமல் தூங்கிய நபர் கதற, அடித்த நபர் அங்கிருந்து பைக் இருக்கும் இடத்துக்கு நகர்ந்து சென்றார். சில அடிகள் தூரம் தான் சென்றிருப்பார்.

மீண்டும் திரும்பி வந்த மறுபடியும் அடி,வெளுக்க ஆரம்பித்தார். அடியும், வலியும் தாங்க முடியாமல் தூங்கி கொண்டிருந்த நபர் கதறினார். ஆத்திரம் தீர அடித்துவிட்டு பைக்கில் புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் அங்குள்ள கேமராவில் பதிவாகி உள்ளன.

வீடியோ காட்சிகள் வைரலாகி விட அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் ஆர்யன் என்பவரை கைது செய்துள்ளனர்.
ஏன் இந்த சம்பவம் என்று விசாரித்த டில்லி போலீசாருக்கு அதிர்ச்சியாக இருந்தது.
குறிப்பிட்ட அந்த நபர், அங்குள்ள பூங்கா ஒன்றில் பொதுவெளியில் அனைவர் முன்னிலையில் சிறுநீர் கழித்துள்ளார். அப்போது அங்கிருந்த ராம்பால் என்பவர் தடுத்திருக்கிறார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் மூண்டு, சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் நீட்சியாகவே ராம்பால் எங்கு இருப்பார் என்பதை அறிந்து தேடிவந்த ஆர்யன், தூங்கி கொண்டிருந்த ராம்பாலை எழுப்பி சரமாரியாக தாக்கிவிட்டு சென்றுள்ளார். கைது செய்யப்பட்ட ஆர்யன், பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

Advertisement