சனாதனம், உதயநிதி, எம்.ஜி.ஆர்...! தி.மு.க.வுக்கு எதிராக கம்பு சுற்றும் பவன் கல்யாண்

8

சென்னை; சனாதனத்தை எதிர்த்த உதயநிதியை மறைமுகமாக விமர்சித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், எம்.ஜி.ஆரை புகழ்ந்து அ.தி.மு.க.,வுக்கு வாழ்த்து சொல்லி இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.




சினிமாவில் அதிரடி





ஆந்திராவின் துணை முதல்வராக இருப்பவர் பவன் கல்யாண். பிரபல நடிகர். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர். சினிமாவில் அதிரடியாக கலக்கிய பவன் கல்யாண், அரசியலிலும் கால் பதித்து நீண்ட போராட்டங்களுக்கு பின்னர் ஆந்திர துணை முதல்வராக மிளிர்ந்து இருக்கிறார்.


திருப்பதி லட்டு





ஆந்திராவில் சனாதனத்தை ஆதரித்தும், அதற்காக குரல் எழுப்பியும் வரும் பவன் கல்யாணை பற்றிய பேச்சுகள் தமிழகத்திலும் ஒலிக்க ஆரம்பித்து இருக்கின்றன. திருப்பதி லட்டு விவகாரத்தில் அதி வேகமாக செயல்பட்டு புயலை கிளப்பிய அவர், சனாதன எதிர்ப்பாளர்களை எதிர்க்க ஆரம்பித்துள்ளார்.


சனாதனம் ஒரு வைரஸ்





திருப்பதியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவர் நேரிடையாக மக்கள் மன்றத்தில் எதிர்ப்பை முன் வைத்தார். அங்கு அவர் பேசுகையில், நிறைய தமிழ் மக்கள் உள்ள இந்த இடத்தில் கூறுகிறேன். சனாதனம் என்பது வைரஸ் போன்றது. அதை அழிக்க வேண்டும் என்று தமிழகத்தில் ஒருவர் பேசி உள்ளார்.


அழிந்து போவீர்கள்





நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இதை யார் சொன்னார்களோ.. அவர்களுக்கு சொல்கிறேன். உங்களால் சனாதனத்தை அழிக்க முடியாது. அதை அழிக்க நினைத்தால் ஏழுமலையான் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள்தான் அழிந்து போவீர்கள். உங்களை போன்று பலர் வந்து சென்றுவிட்டனர். சனாதனம் அப்படியே தான் இருக்கிறது என்று பேசினார்.


வெயிட் அண்ட் ஸீ





இந்த பேச்சில் பவன் கல்யாண், உதயநிதி என்ற பெயரை உச்சரிக்காமல் மறைமுகமாக அனைவர் முன்னிலையில் எச்சரித்து உள்ளது நன்றாக தெரிகிறது. பவன் கல்யாண் எச்சரிக்கை குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது wait and see என்று துணை முதல்வர் உதயநிதி பதிலளித்துள்ளார். தமிழ் முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் கூட பவன் கல்யாணின் பேட்டி ஒளிப்பரப்பாகி தமிழக அரசியலிலும் எதிரொலித்தது.


வாழ்த்து பதிவு





சனாதன ஆதரவு, உதயநிதி கருத்துக்கு எதிர்ப்பு என்ற பவன் கல்யாண் நிலைப்பாடு தற்போது அ.தி.மு.க.,வுக்கு வாழ்த்து என்ற கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. தமது டுவிட்டர் பதிவில் அ.தி.மு.க.,வை சிலாகித்தும், அதன் நிறுவனர் எம்.ஜி.ஆரை புகழ்ந்தும் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.


சென்னை வளர்ப்பு





அந்த பதிவில் எம்.ஜி.ஆர்., புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார் பவன் கல்யாண். அதில் அவர் கூறி இருப்பதாவது; புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., அவர்கள் மீதான எனது அன்பும், அபிமானமும் இப்போதும் அப்படியே உள்ளது. என்னை வளர்த்ததில் சென்னை ஒரு அங்கம். என் மனதில் அது இன்றும் உள்ளது.


புரட்சித்தலைவர்





அ.தி.மு.க.,வின் 53வது தொடக்க நாளான அக்டோபர் 17ம் தேதி புரட்சித் தலைவர் ஆதரவாளர்கள், அபிமானிகள், ரசிகர்கள் என அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். மயிலாப்பூரில் படிக்கும் போது எனது தமிழ் ஆசிரியர் மூலம் புரட்சித்தலைவர் பற்றி அறிந்து கொண்டேன்.


திருக்குறள்





அவரின் செயல்களுக்கு பொருத்தமான திருக்குறள் இருக்கிறது. அந்த குறள் இதுதான்; 'கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி'.

நன்மை, கருணை, நேர்மை, மக்கள் மீதான அக்கறை ஆகிய நான்கும் கொண்ட ராஜாக்களில் அவர் ஒளி.

இவ்வாறு பவன் கல்யாண் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


அரசியல் முடிச்சு





சனாதன ஆதரவு, பின்னர் உதயநிதிக்கு எச்சரிக்கை, இப்போது அ.தி.மு.க.,வுக்கு நேரடி ஆதரவு என பவன் கல்யாண் நடவடிக்கையை தமிழக அரசியலோடு முடிச்சு போட ஆரம்பித்து இருக்கின்றனர் அரசியல் களத்தை உற்று நோக்குபவர்கள்.


தி.மு.க., எதிர்ப்பு





இதுபற்றி அவர்கள் கூறுவதாவது: தமிழகத்தில் பா.ஜ.,வை இன்னமும் எதிர்த்து வரும் கட்சி தி.மு.க. இன்னும் சொல்ல போனால் கொள்கை முழக்கத்துடன் தமது எதிர்ப்பை தி.மு.க,, செய்து வருகிறது. தி.மு.க.,வின் சனாதன எதிர்ப்பை பொறுக்க முடியாமல் தான் உதயநிதிக்கு வார்னிங் கொடுத்தார் பவன் கல்யாண்.


கருத்துகள்





பவனின் இந்த எச்சரிக்கையை கண்டு பொங்கிய உதயநிதி ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க., உடன்பிறப்புகள் பவனை சமூக ஊடகங்களில் வறுத்து எடுத்தனர். அவரின் சகோதரர் சிரஞ்சீவியிடம், தம்பிக்கு அட்வைஸ் செய்யுங்கள் என்ற ரேஞ்சுக்கு கருத்துகளை பதிவிட்டனர்.


ட்ரோல்





ஒரு கட்டத்தில் களத்தில் நேரடியாக இறங்கிய தி.மு.க., ஐ.டி., விங், பவன் கல்யாணை ஏகத்துக்கும் ட்ரோல் செய்து கலாய்த்து தள்ளியது. இவை அனைத்தும் பவன் கல்யாண் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


சீண்டினால் பதிலடி





தி.மு.க.,வின் இந்த நடவடிக்கையை விரும்பாத பவன் கல்யாண், அதை எதிர்கொள்ளவே அக்கட்சியின் பரம வைரியான அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்து, எம்.ஜி.ஆரை புகழ்ந்து தள்ளி இருக்கிறார். இதன் மூலம் தம்மை தி.மு.க., சீண்டினால் அ.தி.மு.க., லைம் லைட்டில் வந்து பதிலடி தரும் என்று அரசியல் கணக்கில் இருக்கிறார் என்று கூறலாம். அதாவது பவன் கல்யாண் பக்கம் நின்று தி.மு.க.,வை அ.தி.மு.க., கடுமையாக விமர்சிக்கும், இது தமக்கு சாதகமாக இருக்கும் என்று கணக்கு போடுகிறார் பவன் கல்யாண். இவர்கள் சண்டையால், நெட்டிசன்களுக்கு நன்றாக பொழுது போகும் என்பது மட்டும் உறுதி.

Advertisement