இலவச மின்சாரம் கொடுத்தால் நானே உங்களுக்கு ஓட்டுக்கேட்பேன்; பா.ஜ.,வுக்கு கெஜ்ரிவால் உறுதி

12


புதுடில்லி: ''டில்லி சட்டசபை தேர்தலுக்கு முன்னர் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் 22 மாநிலங்களிலும் இலவச மின்சாரம் வழங்கினால், பா.ஜ.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் ,'' என டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதனையடுத்து செப்.,15ல் முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், வடக்கு டில்லியில் உள்ள சாத்ரசால் மைதானத்தில் நடந்த இரண்டாவது ' ஜனதா கி அதாலத்' என்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசியதாவது: பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் 22 மாநிலங்களில் இலவச மின்சாரம் வழங்க முடியுமா என பிரதமர் மோடிக்கு சவால் விடுக்கிறேன். டில்லி சட்டசபை தேர்தலுக்கு முன்னர் அப்படி வழங்கினால், பா.ஜ.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்.


நேற்று டிவிக்களில் வெளியான கருத்துக்கணிப்புகள் மூலம், ஹரியானா மற்றும் காஷ்மீரில் பா.ஜ.,வின் இரட்டை இன்ஜின் அரசு போகப்பொகிறது என்பது தெரியவந்துள்ளது. இந்த இரட்டை இன்ஜின் அரசு நாட்டில் தோல்வியடைந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 240 தொகுதிகள் மட்டுமே பெற்ற போது முதல் இன்ஜின் தோல்வியடைந்தது. ஜார்க்கண்ட் மற்றும் மஹாராஷ்டிராவில் இரண்டாவது இன்ஜின் மெதுவாக தோல்வியடைந்து வருகிறது. இரட்டை இன்ஜின் என்றால் இரட்டை பணவீக்கம், இரட்டை வேலைவாய்ப்பின்மை என்பதை மக்கள் உணர்ந்து கொண்டனர். இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

Advertisement