அரிசி ஏற்றுமதி மீதான கட்டுப்பாடு தளர்வு: தென் ஆப்பிரிக்க வர்த்தகர்கள் வரவேற்பு

ஜோகன்னஸ்பர்க்: அரிசி ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை இந்தியா தளர்த்தி உள்ளதற்கு, தென்னாப்பிரிக்க வர்த்தகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


பாஸ்மதி அல்லாத பிற அரிசி ரகங்களை ஏற்றுமதி செய்வதற்கு, மத்திய அரசு 2023 ஜூலையில் தடை விதித்தது. உள்நாட்டில் அரிசி தேவையை பூர்த்தி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த தடையை, மத்திய அரசு கடந்து மாதம் தளர்த்தியது. இதன் மூலம் தங்களுக்கு பயன் கிடைக்கும் என்று தென்னாப்பிரிக்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

தென்னாப்ரிக்கா இறக்குமதியாளர் பிரணவ் தக்கார் கூறியதாவது:

இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு, ஒரு கோடி டன் அரிசி இறக்குமதி செய்கிறோம். எங்களது அரிசி தேவையில் 70 சதவீதத்தை தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகள் பூர்த்தி செய்கின்றன. அதற்கு அடுத்ததாக, இந்தியாவிடம் இருந்து தான் அதிகமான அரிசியை இறக்குமதி செய்கிறோம்.

இதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும்; இந்திய அரிசி கிடைப்பதன் மூலம் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இந்த தகவல் கிடைத்ததுமே நாங்கள் அரிசிக்கு ஆர்டர் போட்டு விட்டோம். இப்போது கன்டெய்னர்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்திய அரசின் முடிவால், சர்வதேச சந்தையில் அரிசி விலை சரியத் தொடங்கியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தென் ஆப்பிரிக்கா வேளாண் வர்த்தக சேம்பரின் தலைமை பொருளாதார நிபுணர் வாண்டில் சிலோபூவும், இந்தியா முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில், இந்திய உணவகங்களை நடத்தி வரும் முகமது லத்தீப்பும், இந்திய அரசின் முடிவை வரவேற்றுள்ளார்.

Advertisement