'ஈசியா' வென்றது இந்தியா: வங்கதேச அணி பரிதாபம்

குவாலியர்: முதல் 'டி-20' போட்டியில் பேட்டிங், பவுலிங்கில் மிரட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ம.பி.,யின் குவாலியரில் உள்ள புதிய மாதவராவ் சிந்தியா மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
அர்ஷ்தீப் அசத்தல்: வங்கதேச அணிக்கு அர்ஷ்தீப் சிங் தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' லிட்டன் தாஸ் (4), பர்வேஸ் ஹொசைன் எமான் (8) வெளியேறினர். வருண் சக்கரவர்த்தி 'சுழலில்' டவ்ஹித் (12), ஜாகர் அலி (8) சிக்கினர். மயங்க் யாதவ் பந்தில் மஹ்முதுல்லா (1) அவுட்டானார். கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (27) ஆறுதல் தந்தார். ரிஷாத் ஹொசைன் (11), டஸ்கின் அகமது (12) நிலைக்கவில்லை.


வங்கதேச அணி 19.5 ஓவரில் 127 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. மெஹிதி ஹசன் மிராஸ் (35) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி தலா 3 விக்கெட் சாய்த்தனர்.
சபாஷ் சாம்சன்: சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. ஷோரிபுல் வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார் சாம்சன். டஸ்கின் அகமது வீசிய 2வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்த அபிஷேக் (16) 'ரன்-அவுட்' ஆனார். டஸ்கின் வீசிய 5வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், 29 ரன்னில் ஆட்டமிழந்தார். சாம்சன் (29) நம்பிக்கை தந்தார்.


பின் இணைந்த நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்திக் பாண்ட்யா ஜோடி கைகொடுத்தது. டஸ்கின் வீசிய 12வது ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய பாண்ட்யா வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 11.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 132 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பாண்டயா (39), நிதிஷ் குமார் (16) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி அக். 9ல் டில்லியில் நடக்கிறது. ஆட்ட நாயகன் விருதை அர்ஷ்தீப் சிங் வென்றார்.

இருவர் அறிமுகம்
இந்திய அணியில் மயங்க் யாதவ் 22, நிதிஷ் குமார் ரெட்டி 21, அறிமுகமாகினர். எட்டு ஆண்டுகளுக்கு பின், 'டி-20' போட்டிக்கான இந்திய 'லெவன்' அணியில் 23 வயதுக்குட்பட்ட இரு வீரர்கள் அறிமுகமாகினர். இதற்கு முன் 2016ல் அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா அறிமுகமாகினர்.

'மெய்டன் ஓவர்'
'வேகத்தில்' அசத்திய மயங்க் யாதவ், தனது முதல் ஓவரை 'மெய்டனாக' வீசினார். சர்வதேச 'டி-20' அரங்கில் அறிமுக போட்டியின் முதல் ஓவரை 'மெய்டனாக' வீசிய 3வது இந்திய வீரர் ஆனார். இதற்கு முன் அகார்கர் (எதிர்: தென் ஆப்ரிக்கா, 2006, இடம்: ஜோகனஸ்பர்க்), அர்ஷ்தீப் சிங் (எதிர்: இங்கிலாந்து, 2022, இடம்: சவுத்தாம்ப்டன்) இப்படி அசத்தினர்.

49 பந்து
அதிக பந்து மீதமிருந்த (49) நிலையில் தனது சிறந்த வெற்றியை பதிவு செய்தது இந்தியா. இதற்கு முன், 2016ல் ஹராரேயில் நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 100 ரன்னை விரட்டிய இந்தியா, 41 பந்து மீதமிருந்த போது வெற்றி பெற்றிருந்தது.

Advertisement