கொடி கம்பம் அமைப்பதில் தகராறு: த.வெ.க., பிரமுகர் மண்டை உடைப்பு

நாகப்பட்டினம்: நாகை அருகே த.வெ.க., கட்சிக் கொடி கம்பம் அமைப்பது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினருடன் ஏற்பட்ட தகராறில், த.வெ.க., பிரமுகர் மண்டை உடைந்தது. கம்யூ. கட்சி பிரமுகர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டது.

நாகை மாவட்டம், பெருங்கடம்பனூர் கடைத்தெருவில், நடிகர் விஜய் துவக்கி உள்ள தமிழர் வெற்றிக் கழகம் கட்சியின் கொடி ஏற்றுவதற்காக, அக்கட்சியின் விவசாய அணி ஒன்றிய செயலாளர் மாரிமுத்து,47, தனது ஆதரவாளர்களுடன் நேற்று காலை கொடி கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

கொடி கம்பம் அமைக்கும் இடத்தின் அருகே, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி கிளை அலுவலகம் இருந்ததால், வேறு இடத்தில் கொடி கம்பம் அமைக்குமாறு கம்யூ., நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

இதில் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதிக் கொண்டனர். இதில் த.வெ.க., பிரமுகர் மாரிமுத்து மண்டை உடைந்தது. மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த இளங்கோவன்,55, துரை,42, ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

காயமடைந்த மூவரும் நாகை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement