தேர்தல் கற்றுக் கொடுத்த பெரிய பாடம்: கெஜ்ரிவால் சொல்வது என்ன ?

43

புதுடில்லி: ''ஒருவர் எப்போதும் அதிக நம்பிக்கையுடன் இருக்கக்கூடாது என்ற பெரிய பாடத்தை தேர்தல் முடிவு கற்றுக் கொடுத்துள்ளது,'' என ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


ஹரியானா மற்றும் காஷ்மீர் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதில் காஷ்மீரி்ல், தேசிய மாநாட்டு - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. ஹரியானாவில் 3வது முறையாக பா.ஜ., ஆட்சியை தக்க வைத்துள்ளது. இங்கு மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 89 ல் ஆம் ஆத்மி போட்டியிட்டது. பிரசாரத்தின் போது, ஆம் ஆத்மியின் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என செல்லும் இடங்களில் எல்லாம் கூறினார். ஆனால், இங்கு ஒரு தொகுதியில் கூட ஆம் ஆத்மி வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை. பெரும்பாலான தொகுதிகளில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டனர்.

அதேநேரத்தில், யாரும் எதிர்பார்க்காத வகையில், காஷ்மீரில் தோடா மாவட்டத்தில் அக்கட்சி வேட்பாளர் மெஹ்ராஜ் மாலிக் வெற்றி பெற்றார். இதன் மூலம் அம்மாநிலத்தில் முதல்முறையாக ஆம் ஆத்மி கட்சி கணக்கை துவக்கி உள்ளது. இவர் தான் அங்கு நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் ஆம் ஆத்மி சார்பில் வெற்றி பெற்ற முதல் வேட்பாளர் ஆவார்.


இந்நிலையில், டில்லி மாநகராட்சி கவுன்சிலர்கள் மத்தியில் கெஜ்ரிவால் பேசியதாவது: ஹரியானா தேர்தல் முடிவுகளை பாருங்கள். தேர்தலில் ஒருவர் அதிக நம்பிக்கையுடன் இருக்கக்கூடாது என்ற பெரிய பாடத்தை இது கற்றுக் கொடுத்துள்ளது. எந்த தேர்தலையும் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒவ்வொரு தேர்தலும், ஒவ்வொரு தொகுதியும் கடினமானது தான். இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

Advertisement