பள்ளி ஆசிரியர் குத்தி கொலை பாசக்கார அண்ணனுக்கு 'காப்பு'

மதுரை:மதுரை, பாலரெங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வல்லரசு. இவரது மகன்கள் கருணாமணி, 38, நினைவரசன், 35, லட்சியராஜ், 32, மகள் ஜெயபாண்டீஸ்வரி. திருமணம் ஆனவர்கள். வல்லரசு நடத்தும் டீக்கடையை லட்சியராஜ் கவனித்து வருகிறார்.

கொலை வழக்கு ஒன்றில் மூத்த மகனான கருணாமணி, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர். நேற்று முன்தினம் இவர், மது குடிக்க பெற்றோரிடம் பணம் கேட்டு வாக்குவாதம் செய்தார். அப்போது அவரை, சகோதரர் நினைவரசன் எச்சரித்து அனுப்பினார்.

ஆத்திரமுற்ற கருணாமணி, இரவு 8:00 மணிக்கு கடைக்கு வந்து, நினைவரசன் மார்பில்கத்தியால் குத்தினார். காயமடைந்த நினைவரசன், அரசு மருத்துவமனையில் நேற்று அதிகாலை இறந்தார்.

இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர், அக்., 6ல் ரயிலில் புறப்பட திட்டமிட்டிருந்தார். அன்று உறவினர் இறந்ததால், நேற்று புறப்பட டிக்கெட் 'புக்' செய்திருந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Advertisement