போதையில் பள்ளிக்கு வந்த தமிழாசிரியர் 'சஸ்பெண்ட்'

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே செறுகோல் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் ஜார்ஜ் ஹென்றி, 56. இவர் மது அருந்திவிட்டு வகுப்புகளுக்கு வருவதாகவும் முறையாக பாடம் எடுப்பதில்லை என்றும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர்.

காலாண்டு விடுமுறைக்கு பின் அவர் இங்கு பணிக்கு வரக்கூடாது. அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளி திறந்தபோது, அந்த தமிழாசிரியர் வழக்கம் போல வகுப்புக்கு வந்தார். இதை தெரிந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, பெற்றோரிடம் விசாரித்தார். தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், நேற்று தமிழாசிரியர் ஜார்ஜ் ஹென்றியை சஸ்பெண்ட் செய்து, முதன்மை கல்வி அலுவலர் நேற்று உத்தரவிட்டார்.

Advertisement