இறுதி சடங்கில் மோதல் விவசாயி அடித்து கொலை

புளியங்குடி:தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி வேலுச்சாமி, 59. இவரது உறவினர் பொன்னுசாமி, ஊராட்சி பொது இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியிருந்தார். இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு அவ்வழியே செல்வதும், அங்குள்ள அடிபம்பை தண்ணீர் பிடிக்க பயன்படுத்துவதும் வழக்கம்.

நேற்று முன்தினம் சமுத்திரபாண்டி என்பவர் இறந்தார். அவரது உடலை எடுத்துச் செல்லும் வழியில், நிலத்தை ஆக்கிரமித்துள்ள பொன்னுசாமி, இவ்வழியே இறுதி ஊர்வலம் வரக்கூடாது எனக் கூறினார். இதனால், ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஒருவரை ஒருவர் கட்டைகளாலும், கற்களாலும் தாக்கிக் கொண்டனர். இதில், வேலுச்சாமி, அவரது சகோதரி வெள்ளைத்தாய், பொன்னுசாமி ஆகியோரும், எதிர்தரப்பில் மகாராணி, ராமர் உள்ளிட்டோரும் படுகாயமடைந்தனர்.

இதில் பலத்த காயமுற்ற வேலுச்சாமி, சிகிச்சைக்கு செல்லும் வழியில் இறந்தார். கொலை வழக்கு பதிவு செய்த புளியங்குடி போலீசார், 14 பேரை கைது செய்தனர்.

Advertisement