இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த 45 படகிற்கு ரூ. 2.62 கோடி நிவாரணம்

ராமேஸ்வரம்:இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்களின் 45 படகுகளுக்கு தமிழக அரசு ரூ.2.62 கோடி நிவாரணம் வழங்க உள்ளது. இதற்காக படகு உரிமையாளரிடம் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ராமேஸ்வரம் முதல் நாகை மாவட்டம் வரை விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் மீன் வளம் நிறைந்த பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிப்பது வழக்கம். இப்பகுதி மீனவர்கள் சில நேரங்களில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் செல்கின்றனர்.

இதனால் இலங்கை வசம் தற்போது 150 க்கும் மேற்பட்ட படகுகள் உள்ளன. இப்படகுகளை விடுவிக்காததால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். இச்சூழலில் இலங்கை சிறைபிடித்த விசைப்படகு, நாட்டுப்படகிற்கு தலா ரூ.6 லட்சம், ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

ராமேஸ்வரம், பாம்பனில் இருந்து 2018 அக்.29 முதல் 2023 டிச.13 வரை மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் 43 விசைப்படகுகள், 2 நாட்டுப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இப்படகின் உரிமையாளருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2.62 கோடி வழங்கப்பட உள்ளது.

இதற்காக நேற்று ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் மீன்துறை அதிகாரிகள் படகு உரிமையாளர்களின் ஆதார் கார்டு, படகு ஆர்.சி., புக், வங்கி கணக்கை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பினர். தீபாவளிக்கு முன் நிவாரண உதவி வங்கி மூலம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement