உளுந்துார்பேட்டை அருகே இன்ஜினியரிடம் வழிப்பறி

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே காரில் வந்த இன்ஜினியரை தாக்கி வழிப்பறி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி ரத்னா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜகணபதி, 40; சாப்ட்வேர் இன்ஜினியர். இவர், தலைவாசல் அடுத்த வீரகனுாரில் இருந்து காரில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

நேற்று அதிகாலை 3:00 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த ஏ.குமாரமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, காரை சாலையோரம் நிறுத்தி இயற்கை உபாதைக்கு சென்றார்.

அச்சமயத்தில் பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் ராஜகணபதியை தாக்கி, அவர் அணிந்திருந்த 18 கிராம் தங்க மோதிரங்கள் மற்றும் மொபைல் போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

படுகாயமடைந்த ராஜகணபதி உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். புகாரின்பேரில், உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து வழிப்பறி ஆசாமிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement