மண்டல பூஜை நடக்கும் கோவிலில் 10 டூவீலர்கள் தீயில் எரிந்து நாசம்

ஈரோடு: ஈரோடு, சின்ன சடையம்பாளையம் மாரியம்மன் கோவிலில், சமீபத்தில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையடுத்து மண்டல பூஜை தொடங்கியது. பூஜை நிறைவடைய உள்ளதால், கோவில் நிர்வாகி குப்புசாமி தலைமையில், ராமேஸ்வரத்தில் தீர்த்தம் எடுத்து வர கடந்த, 6ம் தேதி இரவு சென்றனர். இவர்கள் வந்த டூவீலர், மொபட் உள்ளிட்ட 10 வாகனங்கள், கோவில் முன் போடப்பட்டிருந்த தகர ஷீட் கூரை அடியில் நிறுத்தியிருந்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் தகர ஷீட் தீப்பிடித்தது. எரிந்த நிலையில் டூவீலர்கள் விழுந்ததில் அதுவும் எரியத் தொடங்கின. ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், 45 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், 10 டூவீலர்களும் முற்றிலும் எரிந்து விட்டன. ஈரோடு தாலுகா போலீசார், தடய அறிவியல் துறையினர் ஆய்வில் ஈடுபட்டனர். இதில் இடி, மின்னல் தாக்கியதால் தீ விபத்து ஏற்பட்டு சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவித்தனர்.

Advertisement