வீடு கட்டும் திட்டத்தில் மோசடி: தற்காலிக ஊழியரிடம் ரூ.19 லட்சம் வசூல்

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அருகே, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி செய்த, 19 லட்சம் ரூபாயை ஊழியர்கள் வசூலித்து, பயனாளிகளுக்கு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு, பி.டி.ஓ., அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக சூர்யா, 32, என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், 2019 ம் ஆண்டு முதல், 2023 வரை, பயனாளிகள் அவர்கள் வீடு கட்டும் தன்மைக்கு ஏற்ப, தவணை முறையில் பணம் வழங்கும் பணியில் இருந்தார். அவர், பயனாளிகளின் வங்கி கணக்கில் அனுப்ப வேண்டிய, பணத்தை, தன் நண்பர் வங்கி கணக்கிற்கு அனுப்பி மோசடி செய்தார். வீடு கட்டும் பயனாளி ஒருவர், கடந்த ஜூலை மாதம், தன் வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லை என, பி.டி.ஓ., அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்படி, பி.டி.ஓ., அலுவலக ஊழியர்கள், கணக்குகளை ஆய்வு செய்ததில், சூர்யா, தன் நண்பர் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி மோசடி செய்தது தெரிந்தது.

மேலும் பலரது கணக்குகளை ஆய்வு செய்ததில், பல பயனாளிகளின் பெயரில், 19 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து சூர்யாவிடம், பண மோசடி விவகாரம் குறித்து பி.டி.ஓ., அலுவலக ஊழியர்கள் விசாரணை நடத்தியதில், பணத்தை கையாடல் செய்ததை ஒப்புக் கொண்டார். சூர்யா, பணத்தை திரும்ப செலுத்தியதை அடுத்து, பயனாளிகளுக்கு பணத்தை அனுப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement