விவசாய மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட மின்வாரிய உதவிப் பொறியாளர் கைது

கோவை: விவசாய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய போது, மின்வாரிய உதவிப் பொறியாளர் சத்தியவாணியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.


கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஊஞ்சலம்பட்டியை சேர்ந்தவர் ஜெயராமன். இவருக்கு சொந்தமான நிலம் உடுமலை அருகே பொட்டையம்பாளையத்தில் உள்ளது. விளை நிலத்திற்கு மின் இணைப்பு கேட்டு கொங்கல் நகரம் உதவி பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.


விண்ணப்பத்தை பரிசீலக்கவும் மின் இணைப்பு வழங்கவும் உதவி பொறியாளர் சத்தியவாணி, ஜெயராமனிடம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து ஜெயராமன் திருப்பூர் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்தார்.


ஜெயராமனிடம் லஞ்சமாக 2 ஆயிரம் ரூபாயை சத்தியவாணி வாங்கிய போது திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சசிரேகா தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement