67 வருடங்களாக நடக்கும் ராம்லீலா நாடகம்
நவராத்திரி வந்துவிட்டால் டில்லி மந்தி ஹவுஸ் ராம்லீலா நாடக் அகாடமி களைகட்டிவிடும்,காரணம் ராம்லீலா நாடகம்தான்.
கடந்த 57 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 67 வருடங்களாக இந்த ராம்லீலா நாடகம் நடந்துவருகிறது.
ராமர் பிறந்தது முதல் அவர் பட்டாபிேஷகம் காண்பது வரையிலான காட்சிகளை சொல்லும் இந்த நாடகம் 2 மணி 15 நிமிடம் நடக்கிறது.
ஸ்ரீராம் பாரதிய கலா கேந்திராவின் நிறுவனரும் தலைவருமான சுமித்ரா சரத் ராமால் துவக்கப்பட்ட இந்த நாடகம், தற்போது ஷோபா தீபக் சிங் மேற்பார்வையில் நடந்துவருகிறது.
67 வருடங்களுக்கு முன்பு ராமராக, சீதையாக நடித்தவர்கள் எல்லாம் காலமாகிவிட்டனர், இப்படி ஒவ்வொரு கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் காலமாகும்போது அவர்களது இடத்தை பொறுத்தமானவர்களைக் கொண்டு நிரப்பிவருகின்றனர்.
இப்போது ராமராக நடிப்பவர் கடந்த பதினைந்து ஆண்டுகளாக நடித்துவருகிறார் சீதையும் அப்படியே.
இன்றைய நவீன தொழில்நுட்பத்தின் துணையோடு இந்த நாடகம் இப்போது நடந்துவருகிறது, ஒரு பிரம்மாண்டமான சினிமா பார்த்த அனுபவத்தை இந்த நாடகம் தரும்.ஒவ்வொரு வருடமும் இந்த நாடக அகாடமியில் 20 நாட்கள் இந்த நாடகம் நாள்தோறும் நடைபெறும், கடந்த 3 ஆம் தேதி துவங்கிய இந்த நாடகம் வருகின்ற 26 ஆம் தேதி வரை நடைபெறும்.வாய்ப்பு உள்ளவர்கள் நாடகத்தை பார்த்து மகிழலாம்.
-படங்கள்:சாதிக்பாஷா