பொன்னேரியில் ரயில்வே மேம்பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்கும் பணி தீவிரம்

பொன்னேரி:சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில், பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே, பெரியகாவணம் பகுதியில், எல்.சி., 26 எண் கொண்ட ரயில்வே கேட் உள்ளது.

இது, புதுவாயல் - சின்னகாணம் மாநில நெடுஞ்சாலையில் உள்ளதால், புதுவாயல், ஏலியம்பேடு, பெரியகாவணம், குண்ணம்மஞ்சேரி பகுதிகளை சேர்ந்தோர், பொன்னேரி மற்றும் பழவேற்காடு செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

தொடர் ரயில் போக்குவரத்து காரணமாக, இக்கிராமவாசிகள் நீண்ட நேரம் ரயில்வே கேட்டில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

இதை தவிர்க்க, 2022ல் ரயில்வே நிர்வாகத்தின் வாயிலாக, இங்கு மேம்பாலம் கட்டப்பட்டது. இருபுறமும் இணைப்பு சாலைக்கான பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தன.

கடந்தாண்டு, ரயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் இணைப்பு சாலை அமைக்க, தமிழக அரசு, 59.26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, இணைப்பு சாலை அமைப்பதற்கு நிலம் கையப்படுவத்துவது, வீடுகளை அகற்றுவது, இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அப்பணிகள் முடிந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் துவக்கப்பட்டன. இதற்காக, குண்ணம்மஞ்சேரி மற்றும் பெரியகாவணம் பகுதிகளில், பாலத்தின் இருபுறமும், 948 மீ., நீளத்தில், 31.5 மீ., அகலத்தில் இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பாதசாரிகள் நடந்து செல்வதற்கு தனிப்பாதை, மழைநீர் செல்வதற்கு கால்வாய் உள்ளிட்டவைகளும் அமைக்கப்படுகின்றன.

துாண்கள் அமைப்பது, பக்கவாட்டு கான்கிரீட் சுவர்கள் கட்டுவது என, தொடர்ந்து பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதால், அடுத்தாண்டு இறுதிக்குள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.

Advertisement