மகப்பேறு அறுவை சிகிச்சை டாக்டர் இல்லாத அரசு மருத்துவமனை: கர்ப்பிணிகள் சிரமம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் அறுவை சிகிச்சை டாக்டர் இல்லாததால் தனியார் மருத்துவமனை செல்லும் அவல நிலை இருப்பதால் கர்ப்பிணிகள் சிரமப்படுகின்றனர்.

முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள், சித்த மருத்துவம், மகப்பேறு, எக்ஸ்ரே உட்பட தனித்தனி பிரிவாக செயல்படுகிறது. மகப்பேறு பிரிவில் தனியாக படுக்கை வசதிகள் உள்ளது.

முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள காக்கூர், ஏனாதி, இளஞ்செம்பூர், வெண்ணீர்வாய்க்கால், செல்வநாயகபுரம், கீரனுார், ஆத்திகுளம், புளியங்குடி, விளங்குளத்துார், கீழத்தூவல் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

முதுகுளத்துார் தாலுகாவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக முதுகுளத்துார் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பி வைக்கின்றனர். கர்ப்பிணிகளும் ஏராளமானோர்​பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மகப்பேறு பிரிவில் அறுவை சிகிச்சை டாக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் கடந்த இரண்டு மாதங்களாக அறுவை சிகிச்சை டாக்டர் இல்லாத நிலை உள்ளது. முதுகுளத்துார் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பிரசவத்திற்காக வரும் கர்ப்பிணிகள் அறுவை சிகிச்சை டாக்டர் இல்லாததால் அச்சப்படுகின்றனர். இதனால் தனியார் மருத்துவமனை, ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை செல்லும் அவலநிலை உள்ளது. 50 கி.மீ., செல்ல வேண்டி இருப்பதால் பெண்கள் சிரமப்படுகின்றனர். இதனால் கூடுதல் பணம் செலவழித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவல நிலை உள்ளது.

எனவே முதுகுளத்துாரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் அறுவை சிகிச்சை டாக்டர் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement