பத்திரமாக தரையிறங்கியது ஏர் இந்தியா விமானம்!

4

திருச்சி: திருச்சியில் இருந்து சார்ஜா கிளம்பிய ஏர் இந்தியா விமானம் இயந்திர கோளாறால் நடுவானில் இரண்டு மணி நேரம் வட்டமடித்து, பின்னர் திருச்சி விமான நிலையத்திலேயே பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

ஹைட்ராலிக் பெயலியர்



திருச்சியில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்சின் சார்ஜாவுக்கு 141 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்(AXB613) மாலை 5:40 மணிக்கு கிளம்பியது. விமானம் மேலே சென்ற உடன் சக்கரங்கள் உள்ளே செல்ல வேண்டும். ஆனால், ஹைட்ராலிக் பெயிலியர் காரணமாக, சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. உடனடியாக சுதாரித்த விமானி டேனியல் பெலிசோ, சார்ஜா செல்லாமல் திருச்சியிலேயே விமானத்தை, தரையிறக்க முயற்சி மேற்கொண்டார்.

எமர்ஜென்ஸி லேண்டிங் முறையில் விமானத்தை தரையிறக்க முடிவு செய்தனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எரிபொருள் தீர்ந்த உடன் எரிபொருள் தீர்ந்த பிறகு, தரையிறக்க முடியும் சூழல் உருவானது. எரிபொருள் அதிகம் இருந்தால் எமர்ஜென்ஸி முறையில் தரையிறங்கினால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனை தவிர்க்க விமானி முயற்சி மேற்கொண்டார். இது வழக்கமான முறைதான்.

தயார் நிலை



இதனால், எரிபொருள் தீர்வதற்காக, மாலை 5:40 மணி முதல் நடுவானிலேயே 4,255 அடி உயரத்தில், புதுக்கோட்டை- திருச்சி மாவட்ட எல்லைகளில் 26 விமானம் வட்டமடித்தது. அன்னவாசல் பகுதியில் மட்டும் 16 முறைக்கும் மேலாக சுற்றிய விமானம், பாக்குடி, மலம்பட்டி, ஆவூர், முக்கண்ணாமலைபட்டி உள்ளிட்ட பகுதிகளையும் வட்டமடித்தது.

பயணிகள் பாதுகாப்பு கருதி, மருத்துவ குழுவினருடன் 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டன. விமான நிலையத்தில் இருக்கும் 4 ஆம்புலன்சுகளும் அங்கு வந்தன. போலீசார் குவிக்கப்பட்டனர். விமான ஓடுபாதையில், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. இரண்டு மணி நேர கடும் போராட்டத்திற்கு பிறகு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இது பயணிகளுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் நிம்மதியை கொடுத்தது.

விமானத்தில் இருந்து வெளியே வந்த பயணிகளுக்கு, மருத்துவ சிகிச்சையும், மனநல கவுன்சிலிங்கும் அளிக்கப்பட உள்ளது.

புகைப்படம் வெளியீடு



விமானம் பாதுகாப்பாக தரையிறங்கிய நிலையில், அந்த விமானத்தில் இருந்த பயணிகளின் புகைப்படம் வெளியாகி உள்ளது.

அதிர்ச்சி



பயணிகள் கூறுகையில், '' ஷார்ஜா நோக்கி பயணிக்கிறோம். கோளாறு என யாரும் சொல்லவில்லை. ஒரு மணி நேரத்திற்கு பின்பே, விமானம் வானில் வட்டமடித்த போதுதான் தொழில்நுட்ப கோளாறு இருந்தது தெரிந்தது. இது எங்களுக்கு பயத்தை கொடுத்தது. பத்திரமாக வெளியே வந்த பிறகும் பதற்றம் இன்னும் குறையவில்லை''. இவ்வாறு அவர்கள் கூறினார்.

காத்திருக்கும் பயணிகள்



சார்ஜா செல்ல வேண்டிய பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு மாற்று விமானம் செய்யப்பட்டு உள்ளதாகவும், அது அதிகாலை 3 மணிக்கு அந்த விமானம் வரும் என தெரியவந்துள்ளது.

விசாரணைக்கு உத்தரவு



இயந்திர கோளாறுக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தும்படி சிவில் விமான போக்குவரத்து ஆணையருக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

அரிதான சம்பவம்



இது குறித்து முன்னாள் விமானப்படை விமானிகள் சிலர் கூறுகையில், இது போன்ற சம்பவங்கள் அரிதாகவே நடக்கும். இதில் அச்சப்பட தேவையில்லை. இந்த விமான் அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்டது தான். எரிபொருளை காலி செய்து எடையை குறைக்க விமானம் நடுவானில் வட்டமடித்து கொண்டிருக்கும். மூன்று சக்கரங்களும் செயல்படாமல் இருந்தாலும் தரையிறக்க வழி உள்ளது. எரிபொருள் முழுவதுடன் தரையிறக்கினால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எமர்ஜென்ஸி லேண்டிங் செய்யும் போது விமானத்தில் லேசான அதிர்வு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினர்.

பார்வை



இந்த தகவல் பரவியதும், விமானத்தின் தற்போதைய நிலை பற்றி அறிய உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பேர், பிளைட்டிராக்கிங் இணையதளங்களில் பரிதவிப்புடன் பார்வையிட்டனர்.

Advertisement