வேன் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமிகள் கைது

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் ஜாகீர்மங்கலம் ஊராட்சி, ராஜபத்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 34. இவர், திருவள்ளூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேன் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
திருவாலங்காடு பெட்ரோல் பங்க் அருகே, தொழிற்சாலை வேனில் நேற்று முன்தினம் மாலை ஊழியர்களை ஏற்றி செல்வதற்காக வாகனத்தை நிறுத்தினார்.

அப்போது, அங்கு போதையில் நின்றிருந்த பழையனுாரைச் சேர்ந்த மோகன், 40, கேசவன், 38, ஆகியோர், 'வாகனத்தை ஏன் அதிவேகமாக இயக்குகிறாய்' எனக் கேட்டதோடு, சதீஷ்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

அதன்பின், வாகனத்தை விட்டு கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். கீழே இறங்கி வராததால், ஆத்திரமடைந்தவர்கள் கற்களால் கண்ணாடியை உடைத்தனர்.

இதுகுறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின்படி, வழக்கு பதிந்த திருவாலங்காடு போலீசார், மோகன், கேசவனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement