துாப்புல் பரகால மடத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தெருவில் உள்ள துாப்புல் பரகால மடத்தில் லட்சுமி ஹயக்ரீவர் சன்னிதி உள்ளது. இங்கு விஜயதசமியையொட்டி நேற்று 'வித்யாரம்பம்' எனும், குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடந்தது.

இதில், நெல்மணிகளை தட்டில் பரப்பி அதில், கோவில் அர்ச்சகர், குழந்தைகளின் கையை பிடித்து, தமிழின் முதல் எழுத்துக்களான 'அ' ஆ, என எழுத சொல்லிக் கொடுத்து, அட்சதை துாவி குழந்தைகளை ஆசிர்வதித்தார்.

அதிகாலையில் இருந்தே, தங்களது குழந்தைகளுடன் வந்த பெற்றோர் நீண்ட வரிசையில் காத்திருந்து, ‛வித்யாரம்பம்' நிகழ்ச்சியல் பங்கேற்று தங்களது, குழந்தைகளின் ஆரம்ப கல்விக்கு அடித்தளம் அமைத்தனர்.

முன்னதாக, கல்விக்கடவுளான லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், மாணவ - மாணவியர் பாடபுத்தகம், நோட்டு புத்தகம், பேனா, பென்சில், கரும்பலகையை சுவாமி பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

Advertisement