ஏரியில் மூழ்கி மாயமானவர் தேடியதில் உடல் மீட்பு

குன்றத்துார்:குன்றத்துார் அருகே சோமங்கலம் அடுத்த புதுநல்லுாரைச் சேர்ந்தவர் கார்த்திக், 28, ஓட்டுனர். இவர், ஸ்ரீபெரும்புதுார் அருகே, தனியாருக்கு சொந்தமான ஐச்சர் லாரியை ஓட்டி வந்தார்.

ஆயுத பூஜைக்காக, நேற்று முன் தினம் நல்லுார் ஏரியில் தந்தை சிவகுமாருடன் சேர்ந்து லாரியை கழுவினார். அப்போது ஏரி நீரில் மூழ்கி, நேற்று பகல் 12.00 மணி அளவில் மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் வந்து, ஏரியில் மாயமான கார்த்திகை நேற்று முன்தினம் இரவு வரை தேடியும் கிடைக்கவில்லை. நேற்று இரண்டாவது நாளாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் மெரினா கடற்கரை மீட்பு குழுவை சேர்ந்த நீர்மூழ்கி வீரர்கள் வரவழைக்கப்பட்டு ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் நீரில் மூழ்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு காலை 11.00 மணிக்கு கார்த்திக் உடல் மீட்கப்பட்டது.

Advertisement